Skip to main content

அமெரிக்கப் புரட்சி

1453ல் கொன்தாந்திநோபிள் ஒட்டோமன் துருக்கியரால் கைப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பியருக்கிருந்த கீழைத்தேயங்களுக்கு செல்வதற்கான பாதைகள் அடைக்கப்பட்டன. இதனால் புதிய பாதைகளைக் கண்டறிவதற்கான முயற்சியிலும், தமது ஆதிக்கத்தினை உலகின் ஏனைய பகுதிகளில் விஸ்தரித்துக் கொள்வதற்கான முயற்சியிலும் ஐரோப்பாவில் தோன்றிய தேசிய அரசுகள் முன்னின்று செயற்பட்டன. இதனால் நாடுகாண் பயணங்களுக்கு அரசுகளின் அனுசரணை கிடைக்கப்பெற்றது. இக்காலத்திலே தோன்றிய புவியியல் சார்ந்த அறிவின் விருத்தியும் அத்தகைய நாடுகாண் பயணங்களுக்கு உறுதுணையானது.

இத்தகைய நாடுகாண் பயணங்களுள் கிறிஸ்தோபர் கொலம்பஸ்ஸின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தாலியரான இவருக்கு ஸ்பெயின் தேசத்து அரசன் பேர்டினன்ட், அரசி இஸபெல்லா ஆகியோர் ஆதரவளித்தனர். இவ்வாதாரவோடு மேற்கே பயணித்து இந்தியா, சீனா போன்ற நாடுகளை அடையலாம் எனப்புறப்பட்ட கொலம்பஸ் 1490 இல் பஹாமாவில் காலடி எடுத்து வைத்தார். தான் வந்தடைந்த பிரதேசம் ஒரு புதிய உலகம் என்பதை அறியாத அவர் தான் இந்தியாவையே அடைந்திருப்பதாக கருதினார். இதனால் அங்கு வாழ்ந்தோரை செவ்விந்தியர் என குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து 1497ல் ஜோன் கபோட் எனும் இங்கிலாந்து மாலுமி கிறீன்லாந்து, நியுபவுண்லாந்து போன்ற தீவுகளை கண்டுபிடித்தார். 1501ல் அமெரிக்கோ வெஸ்புசி இன்றைய பிரேசிலில் தரையிறங்கியதுடன் தான் கண்டுபிடித்த நிலப்பகுதி பற்றி தனது ஜேர்மனிய நண்பர் மக்சி முல்லருக்கு கூற அவரே அப்பகுதிக்கு அமெரிக்கா எனப் பெயரிட்டார்.

இவ்வாறு நாடுகளைப் பிடிக்கும் முயற்சியில் ஸ்பெயின் முன்னிலையிலிருந்தது. ஸ்பானியர் அமெரிக்காக் கண்டத்திலிருந்த அஸ்டேக், இன்கா ஆகிய பழங்குடியினரின் இராச்சியங்களை அடக்கி தமதாட்சியினைத் தாபித்துக் கொண்டனர். இதன் பின்னர் அமெரிக்காவில் தமது குடியேற்றங்களை அமைக்க இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளும் போட்டியிட்டன. இதன் விளைவாக 1607 – 1732 வரையான காலத்தில் வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரமாக 13 ஆங்கிலக் குடியேற்றங்கள் தாபிக்கப்பட்டன.

இங்கிலாந்து மக்கள் அமெரிக்கக் கண்டத்தில் குடியேறல்

இவ்வாறாக இங்கிலாந்து மக்கள் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்புச் செய்தது. குறிப்பாக தேசிய அரசுகள் தோன்றியமையினால் ஏற்பட்ட வர்த்தக விருத்தியினைத் தொடர்ந்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போட்டியானது பல பகுதிகள் கைப்பற்றப்படுவதற்கு ஊக்கமளித்தது. அத்தகைய முயற்சிகளுக்கு அரச ஆதரவும் கிடைக்கப் பெற்றது. இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் இத்தகைய முயற்சிகளுக்கு 7ம்,8ம் ஹென்றி ஆகிய அரசர்களும் , எலிசெபத் அரசியும் ஆதரவளித்தனர். எலிசெபத் அரசியின் காலத்திலேயே முதலாவது அமெரிக்க குடியேற்றமான வேர்ஜீனிய குடியேற்றம் தாபிக்கப்பட்டது. 

அதேபோல புதிதாக தோன்றிய அரசுகள் வணிக ரீதியாக இலாபத்தினை ஈட்டிக் கொள்வதும் புதிய குடியேற்றங்கள் அமெரிக்காவில் தாபிக்கப்படுவதில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. இந்நோக்கத்திற்காகவே வர்த்தகக் கம்பனிகள் தாபிக்கப்பட்டதுடன் அக்கம்பனிகள் ஏராளமான மக்களை வெளிநாடுகளில் குடியேற்றின. அவற்றுள் 'இலண்டன் கம்பனி' குறிப்பிடத்தக்கது. இது 1607ல் 120பேரை மூன்று சிறு கப்பல்களில் வேர்ஜீனியாவுக்கு அனுப்பியது. அங்கு கரையிறங்கியோர் தாம் கரையிறங்கிய இடத்தில் தமதரசரின் ஞாபகார்த்தமாக 'ஜேம்ஸ் டவுன்' (Jemes Town) எனப் பெயரிட்டனர். இதுவே பிரித்தானியரின் முதலாவது குடியேற்றமுமாகும். அவ்வாறே பிளிமத் கம்பனி மெயின் எனுமிடத்தில் சிறு குடியேற்றத்தைநிறுவியது.  

இங்கிலாந்தில் ஏற்பட்ட பொளாதார இன்னல்களால் பாதிக்கப்பட்டோர் தம் தொழில், காணி முதலிய தேவைக்காகவும் அமெரிக்காவில் குடியேறினர். குறிப்பாக வறிய பிரித்தானிய கடன்காரர்களின் சௌகரியத்திற்காக 1732ல் ஜெனரல் ஒகிள் தோப் என்பவர் ஜோர்ஜீயா எனும் குடியேற்றத்தை தாபித்தார்.

அத்துடன் 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தத்தினைத் தொடர்ந்து சமயங்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குகளால் பாதிக்கப்பட்ட மக்களும் சமயத்தைப் பரப்ப விரும்பியோரும் அமெரிக்காவைச் சென்றடைந்தனர். குறிப்பாக கத்தோலிக்க சமயத்தை ஏற்றக்கொண்ட ஸ்பானியா அதனை புதிய உலக பிரதேசங்களில் பரப்ப முயன்றது. அதேபோல் பிரித்தானியாவின் தியூடர் வம்சத்தின் அரசியான மேரியின் காலத்தில் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உட்பட்டனர். இதனால் சமய சுதந்திரத்தினை நாடி அமெரிக்காவுக்கு வந்தனர். 1620ல் மதப்பிணக்கு காரணமாக இங்கிலாந்திலிருந்து ஒரு சிறு கூட்டத்தினர் 'மே பிளவர்' என்ற கப்பலில் அமெரிக்காவுக்கு பயணமாகி அமெரிக்காவின் கிழக்குக் கரையில் தமது குடியேற்றத்தை ஆரம்பித்து தாம் நினைத்தபடி மதச்சுதந்திரத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறாக நாளடைவில் அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றங்கள் பெருகின. இவ்வாறு உருவான இங்கிலாந்தின் 13 குடியேற்றங்களும் ஒன்றிணைந்து பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதுடன் காலப்போக்கில் தனது அயலில் இருந்த ஏனைய பகுதிகளையும் இணைத்து ஐக்கிய அமெரிக்க நாடுகளாக உருவாகின. 

அமெரிக்க குடியேற்றங்களில் பிரித்தானியாவின் ஆட்சி

இங்கிலாந்து குடியேற்றங்கள் தோற்றம், காலநிலை என்பவற்றின் அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் வேறுபாடுடையனவாக விளங்கியதுடன் தொழில் அடிப்படையிலும் வெவ்வேறான தொழில்களைக் கொன்டிருந்தன. குறிப்பாக தெற்குப் பகுதிகளில் புகையிலை, நெல், பருத்தி என்பனவும் வடக்கில் விவசாயமும் முக்கிம் பெற்றிருந்தன. ஆயினும் அனைத்து இங்கிலாந்து குடியேற்றங்களும் ஒரே மாதிரியான அரசாங்கங்களைக் கொண்டிருந்தன. அது ஆள்பதி, ஆயுரைக் கழகம், பொதுமக்கள் சபை போன்ற அம்சங்களைக் கொண்டிருந்தன. இவை முறையே இங்கிலாந்தின் அரசர், பிரபுக்கள் சபை, பொதுமக்கள் சபை என்பவற்றினை பிரதிபலித்தன. இங்கு ஆங்கில மொழியும், ஆங்கில நீதி முறையும் வழக்கிலிருந்தன. ஒவ்வொரு குடியேற்றமும் அங்கீகரிக்கப்பட்ட சமயத்தையும் அதனை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும் பெற்றிருந்தன.

வேர்ஜீனிய அரசாங்கத்தில் முதன் முறையாக மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இலண்டன் கம்பனி 1619ல் சுதந்திரக் குடிமக்கள் தம் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமையைப் பெறவேண்டும் எனச் சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆள்பதியுடனும் நியமன அங்கத்தவர்களைக் கொண்ட கவுன்சிலுடனும் இணைந்து சட்டமியற்றினர். இதனால் குடியேற்ற நாட்டவர்கள் தம் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பங்குபற்ற முடிந்தது. காலப்போக்கில் இப் பிரதிநிதிகள் சபையானது வரிவிதித்தல். வசூலிக்கப்பட்ட பணத்தை செலவு செய்தல், ஆள்பதிக்கும் நியமன அங்கத்தவர்களுக்கும் வேதனம் வழங்கல் போன்ற விடயங்களிலும் தம் அதிகாரத்தினை விஸ்தரித்துக் கொண்டன.


விடுதலைப் போருக்கான காரணங்கள்

குடியேற்ற நாடுகளில் காணப்பட்ட வளங்களில் இருந்து கூடுதல் இலாபத்தினை பெறும் நோக்குடன் 1680 அளவில் பிரித்தானிய அரசாங்கமானது கம்பனிகளுக்கு கொடுத்த அதிகாரப் பத்திரத்தினை நிராகரித்து குடியேற்றங்களை மன்னராட்சிக்கு உட்படுத்தியதுடன் ஆள்பதி மூலமாகவும் கோமறைக் கழகத்தின் மூலமாகவும் குடியேற்றங்களை மேலும் கட்டுப்படுத்த முயன்றது. இதனால் அரசியல் துறையில் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் வர்த்தகத்தில் பெருமளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 1651 தொடக்கம் வர்த்தகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குடியேற்றங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை தாய்நாடான இங்கிலாந்துக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யவேண்டும், தங்களுக்கு தேவையான பொருட்களை இங்கிலாந்தின் மூலமே இறக்குமதி செய்யவேண்டும், வர்த்தகம் முழுவதும் சுதேசியரின் கப்பல்களில் அல்லது இங்கிலாந்து கப்பல்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும், எஃகு, கம்பளிப் புடவை, தொப்பி போன்றவற்றை உற்பத்திசெய்யக் கூடாது என பல கட்டுப்பாடுகளை விதித்து குடியேற்ற நாடுகளின் வர்த்தகத்தை கட்டுப்படுத்த இங்கிலாந்து முயற்சித்தது. 

ஆயினும் குடியேற்ற நாட்டு பொருட்களான புகையிலை, சீனி, தேயிலை போன்றவற்றுக்கு இங்கிலாந்து சந்தைகளில் தனிச் சலுகை வழங்கப்பட்டதுடன் வேறு சில பொருட்களில் குடியேற்றங்கள் ஏக வியாபார அதிகாரத்தை பெற்றிருந்தமையாலும் மற்ற நாடுகளுடனான குடியேற்றங்களின் இரகசிய வியாபாரம் கட்டுப்படுத்தப்படாமையாலும் இருசாராரும் நன்மை அடைந்தமையால் இங்கிலாந்தின் வர்த்தக விதிகளுக்கு குடியேற்றங்களில் பாரிய எதிர்ப்புக்கள் தோண்றவில்லை.

ஆங்கிலேயர் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் தம் குடியேற்றங்களை தாபித்த அதே வேளை பிரான்ஸியர் கிழக்கு கனடாவில் குடியேற்றங்களைத் தாபித்திருந்தனர். 1754ல் பிரான்ஸிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையே ஏழாண்டுப்போர் ஆரம்பித்தது, தாய்நாட்டில் சண்டைகள் ஏற்பட்ட போதெல்லாம்  அவை அவற்றின் குடியேற்றங்களிலும் எதிர்ரொலித்தன. இதனால் பிரித்தானியாவின் வட அமெரிக்க குடியேற்றங்களுக்கு அருகிலிருந்த பிரஞ்சுக் குடியேற்றங்களில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆயினும் ஏழாண்டுப் போரின் தோல்வியைத் தொடர்ந்து 1763ல் செய்யப்பட்ட பரிஸ் உடன்படிக்கையினால் பிரெஞ்சுக்காரரின் வட அமெரிக்க பிரதேசம் ஆங்கிலேயருக்குச் சொந்தமானது. இதனால் பிரஞ்சுக் காரர் தம்மீது போர் தொடுத்தால் தாய்நாடான இங்கிலாந்தின் உதவியை நாடவேண்டிவரும் எனும் அச்சம் அமெரிக்கரிடத்தில் நீங்கியது. எனவே இங்கிலாந்தின் குடியேற்ற ஆதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்கொள்ள அமெரிக்கர் தயாராயினர். 

ஏழாண்டுப் போர் வெற்றியின் பின்னர் ஆங்கில புரட்டஸ்தாந்து மக்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கரையோரப் பிரதேசத்துடன் கத்தேலிக்கர்களான பிரஞ்சுக் காரர்களையும், செவ்விந்தியர்களையும் கொண்டிருந்த கனடா, மிசிசிப்பி நதிப் பள்ளத்தாக்கும் இணைக்கப்பட்ட பாரிய பிரதேசம் பிரித்தானியருக்குச் சொந்தமானது. புதிய பிரதேசத்தை பிரஞ்சுக்காரர்களையோ செவ்விந்தியர்களையோ துன்புறுத்தாத வகையில் நிருவகிக்கும் வகையில் நில, மத கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டியதை உணர்ந்த பிரித்தானிய அரசாங்கம் 1763ல் உள்நாட்டு ஒழுங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தியது. இச்சட்டத்தால் மேற்குப்பிரதேசம் செவ்விந்தியருக்கு பிரத்தியோகமாக ஒதுக்கப்பட்டதுடன் கரையோர மாகாணங்கள் அப்பலாச்சிய மலைத் தொடருக்கு அப்பால் மேற்கு நோக்கி விரிவடைவதை தடைசெய்தது. இச்சட்டம் செவ்விந்தியரின் வர்த்தக நிலங்களை வாங்கும் அமெரிக்க பிரபுக்களிடத்திலிருந்து பாதுகாத்தாலும் தம் சுதந்திரத்திற்கும் நாட்டின் எல்லை விருத்தியடைவதற்கும் தடையானது என அமெரிக்கர் கருதினர்.

ஏழாண்டுப் போரின் பின்னர் அப்போரினால் பிரித்தானியருக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்யவும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கான செலவுகளை அமெரிக்காவை ஏற்கச் செய்யும் வகையிலும் அச் செலவுகளை குடியேற்ற நாடுகளே ஏற்றக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அவை மறுத்ததால் 1764ல் பிரித்தானிய பிரதமர் ஜோர்ச் கிரன்வெல் புதிய திட்டங்களை வகுத்தார். இதன்படி 1764ல் வர்த்தக விதிகள் கடுமையாக்கப்பட்டன. அமெரிக்கா குடியேற்றங்களின் இரகசிய வர்த்தகங்களைத் தடுக்க சுங்க அதிகாரிகளை கடற்படை ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்தி பாதுகாப்புக்கு தேவையான பணத்தை சேகரிக்கலாம் என இங்கிலாந்து எத்தனித்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பாராளுமன்றம் சீனிச்சட்டம், நாணயச்சட்டம், முத்திரைச் சட்டம்  எனும் பல சட்டங்களை குடியேற்றங்களில் விதித்தன. 1764 சீனிச் சட்டம் சீனி மீதான சுங்க வரியினை உயர்த்தியது. 1765 முத்திரைச் சட்டத்தின் படி சட்டசம்மந்தமான ஆவணங்கள், துண்டுப்பத்திரங்கள், புதினப்பத்திரிகைகள் போன்றன அரசாங்க முத்திரையை கொண்டிருக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் குடியேற்றங்களின் பாதுகாப்புக்குத் தேவையான 10,000பவுனில் 1ஃ3 பகுதியை சேகரிக்க முடியும் என இங்கிலாந்து எதிர்பார்த்தது. ஏனைய வரிகள் மறைமுகமாக விதிக்கப்பட மறைமுக வரிகளாக இருந்தாலும் இவ் முத்திரைச் சட்டமே குடியேற்றங்கள் மீது விதிக்கப்பட்ட நேரடி வரியாகவிருந்தது. இதனால் குடியேற்ற வாசிகள் மீது நேரடியாக வரி விதிக்கும் சட்டத்தை தமது பிரதிநிதிகள் இல்லாத 3000 மைல்களுக்கு அப்பாலுள்ள பாராளுமன்றம் இயற்ற உரிமையில்லை  எனக்கருதிய குடியேற்றவாசிகள் 'பிரதிநிதித்துவம் இன்றேல் வரியுமில்லை' என வலியுறுத்தினர்.  

முத்திரை வரிக்கு எதிராக ஏற்பட்ட எதிர்ப்பினால் நாடு முழுவதும் கலகங்கள் ஏற்பட்டு அரசாங்க காரியாலயங்கள் தாக்கப்பட்டு முத்திரைக் கடதாசிகள் தீக்கிரையாக்கப்பட்டன. நாடு முழுவதிலும் நடந்த எதிர்ப்புக் கூட்டங்களின் தீர்மானங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன. அத்துடன் அவ்வரி உள்ள காலம் முழுவதும் தாம் இங்கிலாந்து பொருட்களை உபயோகிப்பதில்லை என குடியேற்ற நாட்டு மக்கள் தீர்மானித்தனர். 

பிரதமர் ஜோர்ச் கிரன்வெல் பதவி நீங்கியதன் பின்னர் றொக்கிங்காம் பிரதமராக நியமிக்கப்பட்டதும் முத்திரை வரியினால் இங்கிலாந்தின் வர்த்தகம் பாதிக்கப்படும் எனக்கருதி அவ்வரியை நீக்கினார். ஆயினும் குடியேற்றநாடுகள் மீது தமக்கு வரிவிதிக்கும் உரிமை உண்டு எனவும் ஓர் அறிக்கையிட்டார். முத்திரைவரி நீக்கப்பட்டாலும் பிரித்தானிய நிதி அமைச்சர் டவுன்ஷென்ட் 1767ல் வேறுபல புதிய மறைமுக வரிகளை விதித்தார். இவை டவுன்ஷென்ட் சட்டங்கள் எனப்பட்டன. இதன்படி தேயிலை, கண்ணாடி,ஈயம் காகிதம், வர்ணம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இவ்வரிகள் மூலம் இதுவரையும் சட்ட சபைகளிடம் இருந்து வேதனம் பெற்ற ஆள்பதிக்கும், உத்தியோகஸ்தருக்கும்  சம்பளம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதனால் தம் சுதந்திரத்தை இழக்க வேண்டிவரும் என உணர்ந்த குடியேற்றங்கள் இவ்வரிகளை எதிர்த்தன. 

எனவே 'பிரதிநிதித்துவம் இன்றேல் வரியுமில்லை' என்ற கருத்து மேலும் வலுப்பெற்றது. மசாசுசூட், வேர்ஜினியா, வட கரோலினா போன்ற குடியேற்றங்கள் இவ்வரிகளை எதிர்த்தன. 1770ல் இவ்வரியை பிரதமர் நோர்த் பிரபு நீக்கினாலும் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கு தம் குடியேற்றங்கள் மீதுள்ள வரிவிதிக்கும் உரிமையினை நிலைநாட்டிக் கொள்வதற்கு தேயிலை வரி மட்டும் நீக்கப்படவில்லை.

இவ்வாறு இருசாராருக்கும் இடையில் முரண்பாடுகள் வலுப்பெறத் தொடங்கியபோது  1770ல் பொஸ்டனில் ஒரு கலவரம் ஏற்பட்டது இக்கலவரம் இராணுவத்தால் கடுமையாக அடக்கப்பட்டது. இக்கலவரத்தில் 5 அமெரிக்கர் கொல்லப்பட்டனர் இதுவே பின்னாட்களில் 'பொஸ்டன் படுகொலை' எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1772ல் ஹாஸ்பீ எனும் இங்கிலாந்து கப்பல் தீக்கிரையாக்கப்பட்டது. 1773ல் பொஸ்டன் துறைமுகத்தினுள் செவ்விந்தியர் போல் வேடமிட்டு நுழைந்த அமெரிக்கர்கள் 18,000பவுன் பெறுமதியான 350தேயிலைப் பெட்டிகளை கடலில் வீசினர். இச்சம்பவமே பின்னர்'பொஸ்டன் தேனீர்விருந்து' என அறியப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த இங்கிலாந்து அரசாங்கம் பொஸ்டன் துறைமுகத்தினை மூடியதுடன் மசாசுசூட் சட்டமன்றத்தையும் கலைத்து அது குடியேற்ற நாடுபோல் ஆளப்பட வேண்டும் என சட்டமியற்றியதுடன் ஆள்பதியின் அனுமதியின்றி பொதுக் கூட்டங்களை நடத்தக் கூடாது எனவும் தடைகள் விதிக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கான முயற்சிகள்

மசாசுசூட் சட்டமன்றத்தை கலைக்க எடுத்த நடவடிக்கையானது தம் சுதந்திரத்தை கட்டுப்படுத்ததும் நடவடிக்கை எனக் கருதிய குடியேற்றங்கள் இங்கிலாந்து அரசாங்கத்தின் இத்தகைய நடவக்கைகளால் ஒன்றுபட்டன. ஒவ்வொரு குடியேற்றங்களிலும் இருந்து வரவழைக்கப்பட்ட பிரதிநிதிகள் 1774 செப்டொம்பரில் பிலடெல்பியாவில் ஒன்றுகூடினர். இதுவே முதலாவது பிலடெல்பியா மாநாடு (முதலாவது கண்டங்களின் மாநாடு) எனப்பட்டது. இம்மாநாட்டில் ஜோர்ஜியாவைத் தவிர 12 குடியேற்றங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தகராற்றினை சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் வகையில் தமமீது விதிக்கப்பட்டுள்ள தொழில் மற்றும் வணிகக் கட்டுப்பாடுகளை நீக்கவும் தமது ஒப்புதலின்றி வரிவிதிக்க வேண்டாம் எனவும் இங்கிலாந்தின் 3ம் ஜோர்ஜ் மன்னருக்கு விண்ணப்பம் செய்த போதும் 1774 செப்டொம்பரில் அக் கோரிக்கைகள் மன்னரால் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் மசாசுசூட்டில் கொன்கோட் எனுமிடத்தில் கிளர்ச்சியாளர்கள் வெடிமருந்து, போர்த் தளபாடங்களை சேகரிப்பதாக அறிந்த இங்கிலாந்து ஜெனரல் கேஜ் 1775 ஏப்ரல் 18ம் திகதி இரவில் ஆயுதங்களை பறிமுதல் செய்ய படைகளை அனுப்பினார். அப்படைகள் இலெக்சிங்ரனில் வைத்து அமெரிக்கரால் தாக்கப்பட்டது. இதுதான் அமெரிக்க சுதந்திரப்போரில் முதல் இரத்தம் சிந்தப்பட்ட சந்தர்ப்பமாகும். ஆங்கிலேயர் கொன்கோட் சென்று தம் வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது அமெரிக்க தேசாபிமானிகளால் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் பதின்மூன்று குடியேற்றங்களும் யுத்தம் ஒன்றுக்காக ஒன்றுபட வேன்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியது எனலாம்.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் 1775 மே 10ல் பிலடெல்பியாவில் இரண்டாவது கண்ட மாநாடு பிலடெல்பியாவில் கூடியது. இதில் 13 குடியேற்றங்களும் பங்கேற்றதுடன் இம்மாநாட்டில் தேமஸ் ஜெபர்ஸன், பெஞ்சமின் பிராங்ளின் ஆகிய புகழ்மிக்க தலைவர்களும் பங்கேற்றனர். இங்குதான் அமெரிக்க விடுதலை யுத்தத்துக்கு வேண்டிய ஆயுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜோர்ஜ் வொஷிங்டன் அமெரிக்க இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஆயினும் உடனடியாக யுத்தம் ஆரம்பிக்கப்படவில்லை. மன்னரிடம் இருந்து சமரச தகவல்கள் வரும் என எதிர்பார்த்தனர். மாறாக மன்னர் 1775 அக்டோபர் 23ல் வெளியிட்ட பிரகடணம் ஒன்றின் மூலம் தனது அனுமதியின்றி கூடிய சபையானது அது புரட்சிவாத சபை எனவும் இதனுடன் எவ்வித தொடர்புகளைப் பேண முடியாது எனவும் பிரகடனப்படுத்தினார். இதனால் இனியும் சமரச நடவடிக்கைகள் பயன்தராது எனக்கருதிய அமெரிக்கர் இங்கிலாந்துடன் இருந்த வர்த்தக தொடர்புகளை நீக்கியதுடன் தமது சுதந்திரத்தை பிரகடனம் செய்யவும் தீர்மானித்து 1776 ஜுலை 4ல் பிரசித்திபெற்ற 'அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை' வெளியிட்டனர்.

அமெரிக்கரின் சுதந்திர உணர்ச்சியை தூண்டுவதில் தேமஸ் பெயின் எனும் அறிஞர் முக்கியம் பெற்றிருந்தார். இவர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு வந்து 1776 ஜனவரியில் 'பொது அறிவு' என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். 50 பக்கங்களைக் கொண்டிருந்த அக் கையேடு 13 குடியேற்றங்களிலும் ஒரு இலட்சம் பிரதிகளுக்கு மேல் விநியோகிக்கப்பட்டது. பரம்பரையான முடியாட்சிக்கு எதிராக குடியாட்சியினை வலியுறுத்திய இக்கையேடு அமெரிக்கரிடையே போராடு:ம் உணர்வைத் தூண்டுவதாக அமைந்தது.

சுதந்திரப்போர்   

இதனால் அமெரிக்கருடன் பிரித்தானியர் போரிட வேண்டியதாயிற்று. பிரித்தானியா தமது படையுடன் ஜேர்மனிய வீரர்களையும் சேவைக்காக இணைத்துக்கொண்டது. 1775ல் மாசசூசெட்ஸ் எனும் குடியேற்றத்தில் லெக்சிங்டன்  எனுமிடத்தில் பிரித்தானிய படைகளுக்கும் அமெரிக்கருக்கும் இடையில் ஆரம்பித்த போர் எட்டு ஆண்டுகாலம் நீடித்து. போரின் ஆரம்பத்தில் பிரித்தானியா வெற்றிகளைப் பெற்றது. ஆனாலும் அமெரிக்கப்படைகளின் மனோதிடமும், அமெரிக்காவுக்கு கிடைத்த ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளின் உதவியும் 1781 ஒக்டோபர் 19ல் பிரித்தானியாவை சரணடையச் செய்து அமெரிக்கா போரில் வெற்றி பெறக் காரணமானது. 1782 ஏப்ரலில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதுடன் 1783 பரிஸ் சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் 13 இராச்சியங்களின் சுதந்திரம் பிரித்தானியாவினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் ஐக்கிய அமெரிக்கா எனும் புதிய சுதந்திர அரசு ஒன்றும் உதயமானது. 1789ல் அமெரிக்கா தமது அரசியல் யாப்பினை உருவாக்கிக் கொண்டதுடன் ஜோர்ச் வொஷிங்டன் ஜனாதிபதியானார்.


சுதந்திரப் போரின் விளைவுகள்

1. அமெரிக்க சுதந்திரப் போரானது இங்கிலாந்துக்கு எதிராக அமெரிக்கர்கள் மேற்கொண்ட போராக மட்டுமன்றி ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராகவும் பிற்போக்கு சக்கிகளுக்கு எதிரான போராகவும்  இருந்தது. இதனால் ஏனைய நாடுகளும் அமெரிக்கரைப் பின்பற்றி விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கான முன்னோடியாக இப்போராட்டம் விளங்கியது. அந்த வகையில் பிரஞ்சுப் புரட்சி ஏற்படுவதற்கு அமைரிக்க சுதந்திரப் போராட்டமே வித்திட்டது. 

2. அமெரிக்க சுதந்திரப் போரின் விளைவாக அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஐக்கிய அமெரிக்கா எனும் புத்தம் புதிய குடியரசு உருவானது. வரையப்பட்ட அரசியல் யாப்பினையுடைய முதல் ஜனநாயகக் குடியரசாக ஐக்கிய அமெரிக்கா விளங்கியதுடன் பிரான்ஸிய அரசியலறிஞர் மொண்டஸ்கியுவின் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதலாவது யாப்பும் இதுவேயாகும்.

3. மனித குலத்தின் மேன்மையினை எடுத்தியம்புவதாக தேமஸ் ஜெபர்ஸன் தலைமையிலான ஐந்து பேரைக் கொண்ட குழுவினர் தயாரித்த அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் விளங்கியது. இது 'எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கின்றனர்' எனக் கூறி மனித குலத்தின் மேன்மையையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்தியது.

4. அவ்வாறே மனித உரிமைகள் பற்றிய வரலாற்றிலும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் முக்கிய மைல் கல்லாக விளங்கியதற்கு இப்பிரகடனத்தில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்களே காரணமாகின்றன. இதில் 'பறிக்கவே முடியாத சில உரிமைகளை ஆண்டவன் மனிதருக்கு பிறப்பிலேயே வழங்கியுள்ளான், இவற்றில் வாழ்வு, சுதந்திரம், சுக வாழ்வு போன்றவற்றைத் தேடுவது முக்கியமானவையாகும்... இந்த உரிமைகளைப் பெறவே அரசாங்கங்கள் நிறுவப்படுகின்றன.' எனக் கூறப்பட்டிருந்தது.  

5. அமெரிக்காவில் முதலாளித்துவ அடிப்படைகளைக் கொண்ட சமூக, பொருளாதார அமைப்புகள் உருவானதுடன். ஐக்கிய அமெரிக்கா உலக வல்லரசாகவும் மாற்றமுற்றுக் கொண்டது.


Comments

  1. மிக அருமையான தெளிவான கட்டுரை... நன்றி நண்பரே!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete
  2. மிகவும் தெளிவான ,பாடத்திட்டத்திற்கு பயனுள்ள பதிவு..thank you sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கைத்தொழில் புரட்சி

நவீன உலகினை வடிவமைத்த காரணிகளுள் பல்வேறு புரட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவற்றுள் கைத்தொழிற் புரட்சியும் முக்கியமான ஒன்றாகும். இது அறிவியல் வளர்ச்சியினால் தொழிற்றுறையில் ஏற்பட்டதோர் விரைவான மாற்றமாகும். 1760 – 1830 வரையான காலத்தில் பிரித்தானியாவின் கைத்தொழிற் துறையில் இத்தகைய பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரியமான குடிசைக் கைத்தொழிலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் பெரிய தொழிற்சாலைகளில் பாரிய கேள்வியினை பூர்த்தி செய்யும் வகையில் அதிகளவான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையினை குறிப்பதற்கே கைத்தொழில் புரட்சி எனும் பதமானது 18ம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய மறுமலர்ச்சியும் அதன் விளைவுகளும்

ஐரோப்பாவில் உரோமப் பேரரசின் விழ்ச்சிக்குப் பின்னரானகாலகட்டமானது மானிய முறையினை அடிப்படையாகக் கொண்டிருந்த சமூகப் பொருளாதார அரசியல் அம்சங்களினைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் மேற்படித் துறைகளில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை ஆயினும் கி.பி1300ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கமானது செம்மொழிக் காலத்து இலக்கியம் கலை என்பவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சியினால் கிரேக்க உரோம கலைகளை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவின் விஞ்ஞானம் கைத்தொழில் வர்த்தகம் அரசியல் போன்றனவும் புத்தெழுச்சி பெற ஆரம்பித்தன. இது ஐரோப்பாவில் 1500 வரையிலும் நீடித்தது. சில ஐரோப்பிய நாடுகளில் 1550ல் இருந்து 1600 வரைக்கும் நீடித்திருந்தது. இக்காலத்தையே மறுமலர்ச்சிக் காலம் என்கின்றனர்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட சமய சீர்திருத்தமும் எதிர் சமய சீர்திருத்தங்களும்

ஐரோப்பாவின் நாகரிக வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சமயமும் கிறிஸ்தவ திருச்சபையும் பெரிதும் உதவியது. இதனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் கிறிஸ்தவ சமயம் செல்வாக்குப்பெற்றதொரு சமயமாக விளங்கினாலும் 15ம் நூற்றாண்டு காலத்தில் 6ம் அலெக்சாந்தர்> 2ம் ஜூலியஸ்> 10ம் லியோ போன்ற பாப்பரசர்களும் கிறிஸ்தவ குருமாரும் உலகியல் நாட்டத்தோடு நடத்திய வாழ்க்கை> இதனால் திருச்சபையானது நிலமானிய முறையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தாபனமாக மாற்றமுற்றமை> இவற்றை எதிர்ப்பதற்கான அடித்தளத்தை மறுமலர்ச்சி இயக்கம் உண்டாக்கியமை என்பவற்றினால் 16ம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிரான ஒரு இயக்கம் தோற்றம் பெறத்தொடங்கியது. இதற்கு மாட்டின் லூதர் தலைமைவகித்தார்.